பரம ரகசியம்.
[காவேரி ரமணி.]
எந்த ரகசியத்தையும், நான் என் மனைவியிடம் சொல்வது கிடையாது. ஆனால் அன்று எப்படியோ என் மனசு கேட்காமல், அந்த பரம ரகசியத்தை என் மனைவியிடம் சொல்லித்தொலைத்துவிட்டேன். என் மனைவி சரசாவிடம் சொன்னாலே போதும், டி.வீ விளம்பரக் கம்பெனியைத் தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை.
அவளிடம் சொன்ன ரகசியம் பக்கத்து வீட்டுப் பெண் லில்லி கடற்கரையில் ஒரு வாலிபனுடன் சுத்துவதைப் பார்த்தேன் என்பதுதான். ஆனால் புத்திசாலித்தனம் என்று நினைத்து அந்த ரகசியத்தின் பாதியைத்தான் அவளிடம் சொல்லியிருந்தேன்.
நான் ரகசியம் சொன்ன மாலையே, எங்கள் தெருக்கோடியில் இருந்த பிள்ளையார் கோவிலில், மாலை ஆறு மணிக்கு செய்தி வெளியாகிவிட்டது. வாசித்தவர் என் மனைவி சரசா. கேட்டவர்கள் அவள் சிநேகதிகள் அம்புஜம், சுசீலா,கிரிஜா, வனஜா மற்றும் பலர்.
ராத்திரி சாப்பிடும்போது, பக்கத்து வீட்டிலே இப்படியா பெண்ணை வளர்ப்பாங்க, பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே வேலை பார்க்கிற பொண்ணு வேலை முடிஞ்சதும் வீட்டுக்குத்தானே வரணும். அதை விட்டு ஊரை சுத்த எப்படி விட்டு விடறாங்க? என்று சொல்லி என் விமர்சனத்தையும் தெரிந்து கொள்ள என்னைப்பார்த்தாள்., என் மனைவி. நானும் பதிலுக்கு உன் பிள்ளை கூடத்தான் பெரிய இன்ஜினியர் வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வராம, ஏன் ராத்திரி பத்துமணி வரை ஊரை சுத்திவிட்டு வர்றான்? என்றேன். அவன் ஆம்பிளை நாலு இடம் போவான் வருவான் அத கேட்க முடியுமா? என்றாள். நான் தெரியாத்தனமா உன்னை கேட்டு விட்டேன். ஆளை விடு என்று சொல்லி வாசல் பக்கம் சென்று விட்டேன்.
இரண்டு நாள் கழித்து நான் எதிர்பார்த்தது நடந்து விட்டது. அன்று மதியம் பக்கத்து வீட்டு பரமசிவம் அவர் மனைவியுடன் வந்தார். என்னிடம் என் மகள் லில்லி உங்களை கடற்கரையில் பார்த்ததை விளக்கமாக சொன்னாள். இதை உங்கள் மனைவி எங்களிடமே நேரிடையாக கேட்டு இருக்கலாம். அதை விட்டு விட்டு சம்பந்தம் இல்லாதவர்கள் நாலு பேரிடம் சொல்வது நன்றாக இல்லை. சின்னஞ்சிறுசுகள், பெற்றோர்களை மதிக்காமல் அப்படி நடந்து கொள்வது தவறுதான். நமக்குள் பேசித்தான் இதற்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
என் மனைவி ஏதோ பேச வாயை திறக்குமுன்,நானே முந்திக்கொண்டு, உன் பிள்ளையை ஆம்பிள்ளை, உத்தம புத்திரன் என்றாயே, அவன்தான் லில்லியுடன் சுத்துகிற வாலிபன் போதுமா, நான் சொல்லாத மீதி ரகசியம், போய் நாலு பேரிடம் சொல்லு என்றேன்.
அவள் என்ன பதில் சொல்லப்போகிறாள்?
No comments:
Post a Comment